விநாயகர் கதை - Story of Lord Vinayaga

         கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார். இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார்.


* விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார்.

* விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.

* விநாயகர், யானையை அடக்கும் கருவிகளான பாசமும், அங்குசமும் வைத்திருக்கிறார். தன்னை அடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் தன் கைகளில் இக்கருவிகளை ஏந்தியுள்ளார்.

* விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார்.

* கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.

* விநாயகருக்கு உகந்தது அருகு. இது ஓரிடத்தில் முளைத்து, கொடிபோல நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையுடையது. “”அருகு போல் வேரூன்றி” என்பது பழமொழி. அருகம்புல் இட்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் காய்ச்சல் தீரும். யோகிகள் யோகப்பயிற்சியில் விளையும் சூடு தணிய அருகுக்கஷாயம் அருந்துவார்கள். இதற்கு “மூதண்டக் கஷாயம்’ என்று பெயர்.

* விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார்.

* விநாயகரின் சக்தியாகிய வல்லபை மரீசமுனிவரது புதல்வி.

தோப்புக்கரணம் பிறந்த கதை:

     ஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்கள் தன்னைக் கண்டால் தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். 

       விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். கோபமடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். இதுமுதல் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது.

விநாயகரை கரைப்பது ஏன்?

             கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

விநாயகர் என்றால் தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் என்று பொருள்.

வி – இதற்கு மேல் இல்லை. நாயகர் — தலைவர்.

    வினாயகர் அஷ்டோத்திரத்தில் ஓம் அநீஸ்வராய நம என்ற ஒரு வரி உள்ளது. அதாவது தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதாகும். ஆதிசங்கரர் தனது பஞ்ச ரத்தினம் என்ற வினாயகர் துதியில் அநாயக ஏகநாயகம் என இவரைக் குறிப்பிடுகிறார். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாமல் ஒரே மூலப்பொருளாய் எல்லாவற்றிற்கும் தலைவராய் இருப்பவர் என்பதாகும்.

       பூத கணங்களிற்கு தலைவராய் அதாவது கணங்களிற்கு அதிபதியாய் இருப்பதனால் கணபதி என அழைக்கப்பட்டார்.

         நமது கஷ்டங்களை, வினைகளை, விக்கினங்களை நீக்குபவர் என்பதனால் விக்னேஸ்வரர் ஆனார். யானை முகத்தினன் என்பதனால் கஜானனன் என்றும், மோதகத்தை விரும்பி உண்பதனால் லம்போதரன், மோதகப்பிரியன் என்றும், ஒரு தந்தத்தை உடையவர் என்பதனால் ஏகதந்தன் என்றும் வழங்கப்படலானார்.

       ஐந்து கரத்தினன் எனப்படும் இவர் துதிக்கையுடன் ஐந்து கரத்தினை கொண்டவர். துதிக்கையில் புனித நீர்க்குடம், வலது கைகளில் ஒன்றில் அங்குசமும், மற்றயதில் ஒடிந்த தந்தமும், இடது கைகளில் ஒன்றில் பாசமும், மற்ற கரத்தில் மோதகமும் வைத்திருப்பார்.

          புனித நீர்க் குடத்திலிருக்கும் புனித நீரினைக் கொண்டு உலக வாழ்வில் உழன்று, களைத்து, சோர்வடைந்து தன்னைச் சரணடையும் மக்களின் தாகம் தீர்த்து, களைப்பைப் போக்கி, பிறவா நிலையைக் கொடுத்து தன்னடியில் சேர்த்துக் கொள்கிறார்.

         இதற்கு அவ்வையாரின் வாழ்க்கை சிறந்த உதாரணமாகும். “என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து” அவ்வையார் தனது வினாயகர் அகவலில் மேற்க் கண்ட வரிகளினாலும் மற்றும் வினாயகர் அகவலில் பல இடங்களிலும் வினாயகர் தன்னை ஆட்கொண்டு தனக்கு அருள் செய்த விதத்தினை கூறியுள்ளார்.

        அங்குசம் என்பது யானையை அடக்க உதவும் ஒரு கருவி ஆகும். இவர் கையில் இருக்கும் அங்குசமோ ஆசை என்ற மாய வலையில் சிக்கி அலைந்து திரியும் மனத்தினை அடக்கி ஒருநிலைப்படுத்தி பேரின்ப வீட்டினை தரவல்லது. பாசக் கயிற்றினால் மனித மனங்களில் ஆசாபாசங்களைக் கட்டிப் போடுகிறார். ஒடிந்த தந்தம் மகாபாரதம் என்ற காவியத்தை எழுத பயன்பட்டது. நமது மனங்களில் ஞானத்தை, உண்மை அறிவை எழுதுகிறார்.

       மோதகம் அமுத கலசமாகும். இந்த மோதகத்தினால் மக்களிற்கு அமுதத்தை வழங்கி பிறப்பிறப்பு இல்லாத பேரின்ப நிலையயை அருளுகிறார்.
வினாயகர் ஓங்கார சொரூபமானவர். அவருக்கு செய்யும் வணக்கம் பிரம்மத்தையே சேருகிறது. வினாயகரை வணங்குதல் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று ஒரு வழக்கு மொழியும் கிராமப் புறங்களில் உள்ளது.

            அதாவது மஞ்சள் பொடி, பசும் சாணம் இதர சில பொருட்களினால் பிடித்து வைத்து பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபடலாம். மற்ற எல்லா வழிபாட்டிலும் மிக எளிமையாக வழிபடக் கூடியது வினாயகர் வழிபாடே.

வினாயகர் சதுர்த்தி:-

          ஒரு சமயம் வினாயகர் கைலையில் நடனமாடிக் கொண்டிருந்தார் இவரின் நடனத்தை பார்த்து சந்திரன் ஏளனமாக சிரித்தான். இதனால் கோபம் கொண்ட வினாயகர் சந்திரனை “இன்று முதல் சந்திரன் உருவத்தை யாரும் காணமாட்டார்கள். கண்டவரும் நிந்தை செய்து ஒதுக்குவார்கள். இப்படிப்பட்ட நீசனாகட்டும்” என்று சபித்து விட்டார்.

            இதன் காரணமாய் சந்திரன் கலையிழந்து தேய்ந்து மெலிந்தான். சந்திரன் தன் செய்கைக்கு மிகவும் வருந்தி பின்னர் வினாயகரயே சரண் அடைந்தான். தன்னை சரண் அடைந்தோரிற்கு சகல நன்மைகளையும் தரும் கருணை கடலாம் மூஷிக வாகனன் எம்பெருமான் வினாயகரும் மனமிரங்கி சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் சந்திரனைக் காண்போர் வீணான சங்கடங்களிற்கு ஆளாவர் என்றும். ஆனால் ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் விரதம் அனுட்டித்து வினாயகரை வணங்குபவர்கள் சகல சாப விமோசனமும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ்வர் என சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார்.

         அதனால் தான் வளர்பிறையில் வரும் நாலாம் நாள் சந்தினை யாரும் இன்றும் பார்ப்பது கிடையாது. “நாலாம்பிறைச் சந்திரனை பார்த்தால் நாய் அலைச்சல்” என்று கிராமத்து மக்கள் இன்றும் கூறுவர். ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியே வினாயகர் சதுர்த்தி நாளாகும்.


Tamil Free E-Books Download

பொதுஅறிவு, ஆன்மீகம், ஆரோக்கியம், சிறுகதைகள், வேலை வாய்ப்புகள், பிசினஸ் முன்னேற்றம், லாபம் தரும் பணமுதலீடுகள் பற்றிய தமிழ் இ-புத்தகங்களை Download செய்ய பின்வரும் Link-ஐ Click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/2020/07/ebooks.html 

பொது அறிவு, ஜோக்ஸ், ஆன்மீகம், சுற்றுலா, கம்ப்யூட்டர் கோர்ஸ் (Computer Course), குட்டிக் கதைகள் பற்றிய பல தமிழ் வீடியோக்களை  நாங்கள் யூடியூப்-பில் (YouTube)  வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோக்களை YouTube-ல் காண கீழ்க்கண்ட Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/youtube.html

பொது அறிவுத் தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/general-knowledge-in-tamil-agricultural.html

சிறுகதைகள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/tamil-short-stories.html

ஆன்மீகம் பற்றிய தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://aanmeegamindia.blogspot.com/p/all.html